ஆறாம் நூற்றாண்டில் குப்தர்களின் காலத்தில் இந்தியாவில் தோன்றிய சதுரங்கம் என்ற விளையாட்டின், 2012 ஆம் ஆண்டுக்கான உலக சாம்பியன் பட்டத்தை ஐந்தாவது முறையாக ஆனந்த் பெற்றுள்ளார். நேற்று நடந்த போட்டியில் இஸ்ரேலின் ஜெல்பாண்டை வீழ்த்தி, மீண்டும் மகுடம் சூடினார். இந்தியாவில் பெரும்பாலும் தனி நபர் விளையாட்டில் ஒருமுறை உலக சாம்பியனாகவோ ஒலிம்பிக் சாம்பியனாகவோ வந்தவர்கள் மீண்டும் அதே இடத்தைத் தக்க வைத்தார்களா என்றால் அது மிகப் பெரிய கேள்விக் குறி!. அவ்வகையில் ஆனந்த் மட்டும் விதிவிலக்கு.
ஆனந்த் FIDE என்ற பன்னாட்டு சதுரங்க கூட்டமைப்பு நடத்திய போட்டியில் ஐந்து முறை( ஆண்டு 2000, 2007,2008, 2010 & 2012) உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சதுரங்க பதக்கங்கள்: (AS PER விக்கிபீடியா)
உலகின் அதிவேக சதுரங்க வீரர் என்ற பட்டத்தை பன்னாட்டு சதுரங்க கூட்டமைப்பு நடத்திய போட்டியின் மூலம் 2003 – ல் பெற்றார்.
- 2003 அதிவேக சதுரங்க வெற்றிவீரர்
- 2000 சதுரங்க வெற்றிவீரர்
- 1987 உலக இளநிலை சதுரங்க வெற்றிவீரர், கிராஸ்மாஸ்டர்
- 1985 இந்திய தேசிய வெற்றிவீரர் – 16 வயதில்
- 1984 தேசிய மாஸ்டர் – 15 வயதில்
- 1983 தேசிய இளைநிலை சதுரங்க வெற்றிவீரர், 14 வயதில்
ஆனந்த் பெற்ற விருதுகள்:
ஆனந்த் இந்திய அரசின் விருதுகளை, அதாவது விளையாட்டுக்கான விருதாக வழங்கப்படும் அர்ஜுனா விருது பெறுவதில் ஆரம்பித்து, மெல்ல மெல்ல முன்னேறி இந்தியாவின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷன் விருதுவரை தன்னை உயர்த்திக் கொண்டவர். விருதுகளை ஒருமுறை அவர் பெற்றிருந்தால் விருதால் அவருக்குப் பெருமை எனலாம். ஒவ்வொரு முறையும் இந்திய அரசின் விருதுகளை அவர் பெறுகிற போது அவரால் விருதுக்குப் பெருமை என்பதே சாலப் பொருந்தும்.
அர்ஜுனா விருது: இந்த விருதானது இந்திய அரசினால் தேசிய அளவில் விளையாட்டுத் துறைகளில் சாதனைப் படைப்பவர்களுக்காக, அவர்களை கௌரவப் படுத்தும் வகையில் வழங்கப்படுவது. இந்த விருதினை 1985 ஆம் ஆண்டு ஆனந்த் பெற்றார்.
பத்ம ஸ்ரீ விருது: இந்த விருதானது கலை, கல்வி, தொழில்,இலக்கியம்,பொதுவாழ்வு,அறிவியல், விளையாட்டு மற்றும் சமூக சேவை ஆகியவற்றுக்காக வழங்கப் படுவது. இவ்விருது நான்காவது உயரிய குடியியல் விருது. பத்ம ஸ்ரீ விருதை ஆனந்த் 1987 ஆம் ஆண்டு பெற்றார்.
ராஜீவ் காந்தி கேல்ரத்னா விருது: இந்த விருதிற்கும் அர்ஜுனா விருதுவுக்கும் உள்ள வேற்றுமை என்பது அர்ஜுனா விருது விளையாட்டில் துறை சார்ந்த விளையாட்டுக்கு வழங்கப் படுவது. கேல்ரத்னா விருது என்பது அனைத்து விளையாட்டுகளையும் உள்ளடிக்கிய அதிலிருந்து அவ்வாண்டுக்கான பொதுவான விளையாட்டு வீரரை அடையாளப்படுத்தி வழங்கப்படுவதே! இவ்விருதினை ஆனந்த் 1991 -1992 ஆம் ஆண்டில் பெற்றார். இவ்விருது ஆரம்பிக்கப் பட்ட வருடமும் அதே. அதை பெற்ற முதல் இந்திய விளையாட்டு வீரர் என்ற பெருமை ஆனந்தையே சாரும்.
பிருத்தானிய சதுரங்க கூட்டமைப்பின், ஆனந்த் ஒரு சதுரங்கப் புத்தகம் என்ற விருதை 1998 ஆம் ஆண்டு பெற்றார்.
பத்ம பூஷன் விருது: இந்திய அரசால் வழங்கப்படும் உயரிய விருதுகளில் மூன்றாம் இடத்தில் உள்ள இவ்விருது, ஒவ்வொரு துறையிலும் உள்ள சிறந்த நபருக்காக வழங்கப் படுவது. அவ்வகையில் இந்த விருதுவும் ஆனந்தை ஆண்டு 2000 -ல் தேடி வந்தது.
சதுரங்க ஆஸ்கார் என்ற விருதை (1997,98,2003,2004,2007 & 2008 ) ஆகிய ஆண்டுகளில் பெற்றுள்ளார்.
பத்ம விபூஷன் விருது: இந்திய அரசு வழங்கும் விருதுகளின் இரண்டாம் இடத்தில் உள்ள இந்த உயரிய விருதினை ஆனந்த் 2007 ஆம் ஆண்டு பெற்றார்.
ஆனந்தை, தேடி வர வேண்டிய விருது இன்னும் ஒன்றே ஒன்றுதான் இருக்கிறது. அதுதான் இந்திய அரசால் வழங்கப்படும் உயரிய விருதான (முதல் இடம்) பாரத ரத்னா விருது. இவ்விருது கலை,அறிவியல்,இலக்கியம் மற்றும் பொதுசேவை ஆகியவற்றிற்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.
கடந்த ஆண்டு நவம்பர் 2011 – ல் , சட்ட திருத்தங்களுடன் மற்ற துறையில் சாதித்தவர்களுக்கும் வழங்கப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது. ஆகையால் விளையாட்டு வீரர்களைப் பொறுத்தவரையில், எல்லா விருதுகளையும் முதலில் பெறும் நபராக இருக்கும் விஸ்வநாதன் ஆனந்த் தான் அதற்கு மிக்க பொருத்தமானவர் என்பதில் கடுகளவும் ஐயமில்லை. ஒருவேளை விளையாட்டில் பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தால் அப்போது விஸ்வநாதன் ஆனந்த் தான் முதல் விருதை வாங்கும் தகுதியானவராக இருப்பார்.
தமிழனாய், இந்தியனாய் உலகிற்கு மூளை சார்ந்த ஒரு விளையாட்டில், முதல்வனாய் மீண்டும் நீ வந்ததில் மிக்க மகிழ்ச்சியும் வாழ்த்துகளும்!