தகவல் அறியும் உரிமைச் சட்டம் பாகம் 1, பாகம் 2 படிக்க விரும்புபவர்கள் இதை அழுத்திப் படிக்கவும்.
யார் தகவல்களைத் தர வேண்டும்?
மத்திய மாநில அரசுத்துறைகள் ஒவ்வொன்றிலும் அந்தத் துறைகளின் கீழ் உள்ள உட்பிரிவுகளிலும், தகவல்களைக் கொடுப்பதற்காகவே இந்தச் சட்டத்தின் படி ” பொதுத் தகவல் அதிகாரிகள் ” நியமிக்கப் படுகிறார்கள்.
பொதுத் தகவல் அதிகாரியின் பெயரிட்டு எழுத வேண்டாம். வெறுமனே பொதுத் தகவல் அதிகாரி என மனுவில் எழுதினால் போதும்.
மாநில அளவில் அல்லது மாவட்ட அளவில் இருக்கும் அரசின் துறைகளில் மட்டுமே “பொதுத் தகவல் அதிகாரி” இருப்பார்.துறைகளின் உட்பிரிவுகளிலோ அல்லது கீழ் மட்ட நிலையில் இருக்கும் அலுவலகங்களிலோ அல்லது உட்கோட்டங்களிலோ பொதுத் தகவல் அதிகாரிக்குப் பதிலாக உதவிப் பொதுத் தகவல் அதிகாரி இருப்பார். இந்த இருவரும்தான் தகவல் தரக் கூடியவர்கள்.
பொதுத் தகவல் அதிகாரியின் கடமை என்ன?
இந்தச் சட்டத்தின் படி, நமது மனு நிராகரிக்கப் பட்டால் அதை மனுதாரருக்குத் தெரிவிக்க வேண்டிய கடமை அவருக்கு உண்டு. மனு நிராகரிக்கப் பட்டதற்கான காரணம், யாரிடம் மேல்முறையீடு செய்வது, மேல்முறையீட்டு அதிகாரியின் பெயர், பதவி, மேல்முறையீட்டுக்கான காலக் கெடு , அதனை செயல்படுத்த வேண்டிய முறைகள், மேல்முறையீட்டுக்கு விதிக்கப்படும் கட்டண விவரங்கள் (தமிழ் நாட்டில் இல்லை, மற்ற மாநிலங்களில் உண்டு) போன்ற விவரங்களை ” பொதுத் தகவல் அதிகாரி ” மனுதாரருக்கு எழுத்து மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.
பொதுத் தகவல் அதிகாரியின் மற்ற கடமைகள்:
1. தகவல்கேட்டு வரும் மனுவிற்கு 30 நாட்களுக்குள் மனுதாரருக்கு பதில் அனுப்ப வேண்டும். ஒருவருடைய உயிர் அல்லது சுதந்திரம் தொடர்புடைய பிரச்சினைகளுக்கு 48 மணிநேரத்துக்குள் பதில் அனுப்ப வேண்டும்.
2. விண்ணப்பத்தில் கேட்கப் படும் தகவல்கள் தங்கள் துறையைச் சார்ந்தது அல்லாமல் இருக்கிற பட்சத்தில் அதை சம்பந்தப் பட்டத் துறைக்கு அனுப்ப வேண்டும் . மேலும் அனுப்பிய அத்தகவலை மனுதாரருக்கு 5 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும்.
3. மனுதாரரின் கோரிக்கை நிராகரிக்கப் பட்டால் , சட்டப் பிரிவு 8 , 9 ன் கீழ் பொருத்தமான காரணத்தைச் சொல்ல வேண்டும்.
4. மனுதாரர் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருந்தால், அதனை செலுத்தக் கோரி உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். இதை 30 நாட்கள் என்ற கால அளவுக்குள் கொண்டு வர இயலாது.
5. மனு எழுதத் தெரியவில்லை என்றாலும் மனுதாரருக்கு, பொதுத் தகவல் அதிகாரி உதவிகள் செய்ய வேண்டும்.
6. மூன்றாம் தரப்பினர் பற்றிய தகவல் கேட்டு வரும் மனுக்களுக்கு , மூன்றாம் தரப்பினரின் கருத்தையும் கேட்டே , அவர் தகவல் தெரிவிக்க வேண்டும்.
7. அரசின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் தகவல்கள் , திசை திருப்பக் கூடிய தகவல்களைத் தவிர மற்ற தகவல்களை சாதாரண படிவத்திலேயே விளக்கம் தர வேண்டும்.
8. மனுதாரரிடம் எதற்காக இந்த மனு செய்கிறீர்கள் போன்ற கேள்விகளை அவர் கேட்கக் கூடாது.
மூன்றாம் தரப்பினர் பற்றிய தகவல்கள் :
தகவல் கேட்பவர் , தகவல் தருபவர் இரண்டுக்கும் அப்பாற்பட்ட தகவலுக்கு உட்பட்டவர்தான் மூன்றாம் தரப்பினர். அரசுத் துறைகளிடம், தனியார் நிறுவனங்கள் அல்லது தனி நபர் தொடர்பான தகவல்கள் இருந்தால், அதைக் கேட்டுப் பெற முடியும். இதனைத்தான் மூன்றாம் தரப்பினர் பற்றிய தகவல்கள் என்கிறோம். இதே போல், அறக்கட்டளை, அரசு சாரா நிறுவனம் உள்ளிட்டவற்றின் விவரங்கள் அறக்கட்டளை ஆணையர் அலுவலகத்தை அணுகிப் பெற முடியும்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் அரசியல் வாதிகள் மற்றும் முக்கியப் புள்ளிகளின் வருமான வரிக் கணக்குகளைக் கூட கேட்க முடியும். இவையெல்லாம் கூட மூன்றாம் தரப்பினர் பற்றிய தகவல்கள் என்ற அடிப்படையிலேயே வரும். ஆனால் மூன்றாம் தரப்பினரின் ஒப்புதலோடுதான் பொதுத் தகவல் அதிகாரி தகவல்களைத் தர முடியும்.
நமது அரசியல்வாதிகள் எப்படி?
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், Fact India என்ற அமைப்பின் உறுப்பினரான கோபாலகிருஷ்ணன் என்பவர் கருணாநிதி , ஜெயலிலிதா மற்றும் முக்கிய ஐந்து அமைச்சச்சர்கள் பற்றிய ஐந்து ஆண்டுகளுக்கான வருமான வரிக் கணக்கு விவரங்களைக் கேட்டு விண்ணப்பித்திருந்தார்.
T .R . பாலு, ப.சிதம்பரம் தங்கபாலு ஆகியோரின் வருமான வரி கணக்கைக் கொடுக்கலாமா என அவர்களிடம் கேட்கப்பட்ட போது, தரக் கூடாது என அவர்களே சொல்லி விட்டார்கள்.
இதுவாவது பரவாயில்லை. சட்டசபையில் எம்.எல்.ஏக்கள் ஆண்டுதோறும் வருமான வரிக் கணக்குகளை சட்டசபைக்குத் தரவேண்டும் என்று நிறைவேற்றிய (27.08.69) கருணாநிதியே, அவரது வருமான வரி கணக்கு விவரத்தைக் கேட்ட போது தரக் கூடாது என்று சொல்லி இருப்பதுதான் வேடிக்கை!!
ஜெயலலிதாவிற்கோ வருமான வரித் துறையே தகவல் தர மறுத்து விட்டது. விஜயகாந்த் பற்றி தகவல் கேட்கப்பட்ட போது , ” தகவல் அறியும் சட்டத்தில் வருமான வரித் துறைக்கு விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது ” என்று சொல்லி நிராகரித்து விட்டார்கள்.
அழகிரிக்கும், ஸ்டாலினுக்கும் அதே பதிலைத் தந்தார்கள்.
ஞான தேசிகன் தகவல் தரக் கூடாது என சொல்லி இருக்கிறார்.
மன்மோகன் சிங், சோனியா காந்தி, ராகுல் காந்தி, அத்வானி, வருண் காந்தி ஆகியோரின் வருமான வரிக் கணக்கைத் தர இயலாது என பொதுத் தகவல் அதிகாரியே தகவல் தர மறுத்து விட்டார்.
இவர்களெல்லாம் பரவாயில்லை. கே. ஜி. கோபால கிருஷ்ணன் என்ற முன்னாள் தலைமை நீதிபதி, வருமான வரிக் கணக்கு தரக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்ததோடு அல்லாமல் , நீதித் துறைக்கு விலக்கு அளிக்க வேண்டும் எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.
பொதுத் தகவல் அதிகாரி மூன்றாம் தரப்பினர் பற்றிய தகவல்களைத் தருமுன், மூன்றாம் நபரிடம், தான் என்ன தகவல்களைத் தரப் போகிறேன் என்பதை எழுத்து வடிவில் அனுப்பி அவரின் அனுமதி பெற்றே மனுதாரருக்குத் தெரியப் படுத்த வேண்டும்.
மனுவை எப்படி அனுப்புவது, மனு எப்படி எழுதுவது என்பதைப் பற்றி அடுத்த பகுதியில் பார்ப்போம். இந்தக் கட்டுரை எழுதுவதற்குக் காரணம், நான் படித்தறிந்த விடயங்களை மற்றவர்களும் அறிய வேண்டும் என்பதற்காக மட்டுமே எழுதுகிறேன். இதில் எனக்கு மிக்க மகிழ்ச்சியே!!!.